நல்லடியார்களின் கப்ருகளின்மீது…




ரஸூல் (ஸல்) அவர்கள் கப்ருகள் பூசப்படுவதையும், அவற்றின்மீது எதனையும் எழுப்படுவதையும் தடுத்துள்ளார்கள் என அவர்களின் அன்புத்தோழர் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதி)
    யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணங்கும் இடமாக ஆக்கிய காரணத்தால்,  அல்லாஹ்  சபித்துவிட்டான்  என  தன்னுடைய  மரண  தருவாயில்  நபி(ஸல்)  அவர்கள் கூறினார்கள், என அவர்களின் அன்பு மனைவி அன்னை ஆயிஸா அவர்கள் அறிவித்துவிட்டு, “இவ்வாறு ரஸூல் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கா விட்டால் அவர்களின் கப்ரும் (தரைமட்டத்தைவிட)உயர்தப்பட்டிருக்கும் “என்று கூறினார்கள் .(புகாரி)
    கப்ருகள் பூசப்படுவதையும் , அதன்மீது உட்கார்வதையும் ரஸூல் (ஸல்) அவர்கள்  தடுத்தார்கள்.  ஜாபிர் (ரலி)  முஸ்லிம்
    யூத, கிறிஸ்தவர்களில் ஒரு நல்ல மனிதன் இறந்து விடும்போது அவனது கபுரின் மீது ஒரு வணங்கும் இடத்தை கட்டிக்கொள்வார்கள், நாளடைவில் அதில் சில வடிவங்களையும் அமைத்துக்கொள்வார்கள். அல்லாஹ்விடம் இவர்களே மிகக் கெட்டவர்கள். என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அன்னை ஆயிஸா (ரலி) (புகாரி)

கப்ருகளுக்கு ஸஜ்தா செய்வாயா ?

    நீ எனது கப்ருக்கு அருகில் நடந்து சென்றால் அதற்கு ஸஜ்தா செய்வாயா? என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள்.” அவ்வாறு நான்செய்யமாட்டேன் “என நான் பதில் கூறினேன் . அதற்கு அவர்கள் ஆம்! கப்ருக்கு ஸஜ்தா செய்யாதீர்கள் என்றார்கள் . கைஸிம்னு சயீத் (ரலி) (அபூதாவூத்)

கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை……

    கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை ரஸூல் (ஸல்) அவர்கள் சபித்தார்கள் .என அவர்களின் நெருங்கிய தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் . (இப்னுமாஜா) . .
    தரை மட்டத்திற்குமேல் உயரமாகக் கட்டப்பட்ட எந்த கப்ரையும் தரை மட்டமாக்காமல் விட்டுவிடாதே! என்று  நபி(ஸல்) அவர்கள் என்னை  நியமித்தார்கள்  அதே பணியைச் செய்து வர உன்னை  நான் அனுப்பி வைக்கிறேன் என்று அபுல் ஹய்யாஜ்  என்பவரை நோக்கி அலி (ரலி) அவர்கள்  கூறினார்கள்.  நூல்: முஸ்லிம்
    யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! ஏனெனில் அவர்கள் தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்.  அபூஹுரைரா(ரலி)  புகாரி, முஸ்லிம்

பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நபி(ஸல்) அனுமதித்தார்கள்



Post image for பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நபி(ஸல்) அனுமதித்தார்கள்
‘உங்கள் மனைவியர் பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: புகாரீ 5238, முஸ்லிம் 666
முஃமினான பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ள முடியாது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 578, முஸ்லிம் 1021
‘நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகின்றேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: புகாரீ 707
காஃப் வல்குர்ஆனில் மஜீத்’ என்று துவங்கும் அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்களின் நாவிலிருந்து தான் மனனம் செய்தேன். அதை அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் மிம்பரில் மக்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்தும் போது ஓதுவார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஹிஷாம் (ரலி)
நூல்: முஸ்லிம் 1442
உமர் (ரலி) அவர்களின் மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ் மற்றும் இஷாத் தொழுகைகளில் பள்ளியில் ஜமாஅத்தில் கலந்து கொள்வார். அவரிடம், ‘(உங்கள் கணவர்) உமர் (ரலி) ரோஷக்காரராகவும், இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அப்பெண்மணி, ‘அவர் என்னைத் தடுக்கக் முடியாது. ஏனெனில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் சொல் (என்னைத் தடுப்பதை விட்டும்) அவரைத் தடுத்து விடும்’ என்று கூறினார்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரீ 900
பெண்கள் பள்ளிக்கு வரலாம் என்றாலும் இரவில் பள்ளிக்கு வரும் போது நறுமணம் பூசக் கூடாது.
‘நறுமணம் பூசிக்கொண்ட பெண் நம்முடன் இஷாத் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 675

அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்)




அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்
     ஹிஜ்ரீ ஐந்தாம் நூற்றாண்டில் இஸ்லாமிய உலகம் கண்ட மாபெரும் சீர்திருத்தவாதி அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள். இஸ்லாமிய உலகில் மற்ற எவரது பெயராலும் கட்டிவிடப்பட்டுள்ள கதைகளைவிட, இவர்கள் பெயரால்தான் அதிகமாக பொய்யான கதைகள் உலவுகின்றன. இறைவனுக்கு இணைவைக்கக்கூடிய தகாத சொற்களைக் கூட அவர்கள் சொன்னதாகத் துணிந்து பொய்ப்  பிரச்சாரமும் செய்யப்படுகின்றது.
       “என்னை ஆயிரம் முறை அழைத்தால் நான் ஓடோடி வருவேன்”என்றும்,
       “எனது அனுமதியுடன் தான் சூரியன் சந்திரன் உதிக்கின்றன” என்றும்,
       “உலகில் எது நடந்தாலும் எனக்குத் தெரியாமல் நடப்பதில்லை” என்றும்
அவர்கள் கூறியதாக நம்பப்பட்டும் வருகின்றது. 
       இவையும், இன்னும் பல இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரணானவைகளும் அவர்கள் பெயரால் ஓதப்பட்டு வருகின்ற மவ்லிதுகளிலும், யாகுத்பாவிலும் காணப்படுபவை.
       அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் தனது எந்த நூலிலும் இவ்வாறு கூறியிருக்கவில்லை. அவர்கள் காலத்தில் எழுதப்பட்டுள்ள எந்த நூற்களிலும் அவர்கள் இப்படிச் சொன்னதாக ஒரு சிறு குறிப்பும் காணப்படவில்லை. மாறாக ஹிஜ்ரீ-ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அந்தப் பெரியார் இந்த ஷிர்க்கான சொற்களைச் சொன்னதாக 1100-ல் எழுதப்பட்ட மவ்லிது கிதாபுகளில் தான் காணப்படுகின்றது. அவர்களின் காலத்திற்கு சுமார் 600 ஆண்டுகளுக்குப்பின் வந்தவர்கள்தான் இப்படிப்பட்ட அவதூறுகளை அள்ளி வீசியிருக்கின்றனர்.
       அவர்கள் மரணமடைந்து 600 ஆண்டுகளாக, “அவர்கள் இப்படிச் சொன்னதாக” எவரும் எழுதி வைத்திருக்கவில்லை. இதுவே திட்டமிட்டு இட்டுக்கட்டப்பட்டுக் கூறிய பொய்கள் என்பதற்கு மறுக்கமுடியாத ஆதாரமாகும்.
       மாறாக இதுபோன்ற தவறான நம்பிக்கைகளைத் தகர்க்கின்ற விதத்தில் தான் அவர்களே எழுதிய “குன்யதுத்தாலிபீன்” என்ற நூலில் காணப்படுகின்றது. ஆதாரபூர்வமாக தொகுக்கப்பட்ட அவர்களின் சொற்பொழிவுகள் அடங்கிய “ஃபு தூஹுல் கைப்” “அல்ஃபத்ஹுர்ரப்பானி” ஆகிய நூல்களும், இந்தப் பொய்யான தகவல்களை மறுக்கும் விதமாகவே அமைந்துள்ளன.
       அவர்கள் தனது கைப்பட எழுதிய உண்மைகளை ஏற்பதா? அல்லது அவர்கள் பெயரால் மிகவும் பிற்காலத்தில் புனையப்பட்ட பொய்களை ஏற்பதா? என்ற முடிவை வாசகர்களிடம் விட்டுவிடுகிறோம்.
       அவர்களது நூலிலிருந்தும் ,அவர்களின் சொற்பொழிவுகளிலிருந்தும் ,அவர்களின் கருத்தைத் தக்க ஆதாரங்களுடன் தொகுத்துத் தந்துள்ளோம்.
       இதன் பிறகாவது உண்மையை உணராதோர், தனது தவறான முடிவை மாற்றிக்கொள்வார்கள் என்று நம்புவோம். அல்லாஹ் ,தான் நாடியவர்களுக்கே நேர்வழி காட்டுவான்.
இரண்டு போதுமே!
       நாம் பின்பற்றிச் செல்ல, நபி(ஸல்) அவர்களைத் தவிர வேறு நபி நமக்கு இல்லை. நாம் செயல்பட குர்ஆனைத் தவிர வேறு வேதம் எதுவுமில்லை. எனவே அவ்விரண்டை விட்டும் அப்பாற்பட்டு விடாதே!அவ்விரண்டையும் நீ விட்டுவிட்டால் நீ நாசமடைந்து விடுவாய்! ஷைத்தானும், உன் மனோ இச்சையும் உன்னை வழி கெடுத்து விடும்.  ஃபுதூஹுல்கைப், 36வது சொற்பொழிவு
          திருக்குர்ஆனையும், நபி வழியையும் உனக்கு முன்னால் வைத்துக்கொண்டு, அவ்விரண்டிலும் ஆழமாகச் சிந்தனை செய்து, அவ்விரண்டின்படி நீ செயல்படு! அவர் அப்படி சொல்லி இருக்கிறார். இதில் இப்படி சொல்லப்பட்டுள்ளது போன்ற உளரல்களைக் கண்டு ஏமாந்து விடாதே! ஏனெனில் “ரசூல் எதைக்கொண்டு வந்தாரோ, அதை எடுத்துக்கொள்ளுங்கள்! அவர் எதைத் தடுக்கிறாரோ அதிலிருந்து விலகிக்கொள்ளுங்கள்” என்று அல்லாஹ் கூறுகின்றான். குர்ஆனிலும், நபி வழியிலும் தான் (ஈமானுக்குப்) பாதுகாப்பு உண்டு. அந்த இரண்டைத் தவிர மற்றவைகளில் நாசம் தான் உண்டு.குர்ஆன், நபி வழி இவ்விரண்டின் மூலமாக மட்டும்தான் ஒரு அடியான் இறை நேசனாக முடியும். ஃபுதூஹுல்கைப், 36வது சொற்பொழிவு
     குர் ஆனையும், நபி வழியையும் பின்பற்றாத வரை உனக்கு (மறுமையில்) வெற்றி கிட்டாது. ஃபத்ஹுர்ரப்பானி, 39வது மஜ்லிஸ்                                   
பித்அத் செய்யாதீர்கள்!
       நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின்பற்றுங்கள்! ‘பித்அத்’களை உருவாக்கி விடாதீர்கள்! இறை உத்தரவுக்குக் கட்டுப்படுங்கள்! மனமுரண்டு பிடிக்காதீர்கள்! இறைவனை ஏகத்துவப்படுத்துங்கள்! அவனுக்கு இணை வைக்காதீர்கள்!  ஃபுதூஹுல்கைப், பக்கம் 180
       பித்அத்களை உருவாக்குபவனை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளனர். “எவன் பித்அத்தை உரு வாக்குகிறானோ, அவன் மீது அல்லாஹ்வின் சாபமும், மலக்குகளின் சாபமும், நல்லடியார்கள் அனைவரின்  சாபமும் ஏற்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.  குன்யதுத் தாலிபீன், பக்கம் 81  
ஏகத்துவ முழக்கம்
       எதனையும் செய்பவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. இயக்குபவனும், இயக்கங்களை முடித்து வைப்பவனும் அல்லாஹ்வைத்தவிர எவருமில்லை; நல்லதும் கெட்டதும், துன்பமும் இன்பமும், கொடுப்பதும் கொடுக்க மறுப்பதும், திறப்பதும் திறந்ததை மூடுவதும், வாழ்வும் மரணமும், இழிவும் மதிப்பும், வறுமையும் செல்வமும் அல்லாஹ்வின் கையில் மட்டுமே உண்டு.  ஃபுதூஹுல்கைப், 2வது சொற்பொழிவு
       படைப்பினங்களை அல்லாஹ்வுக்கு இணையாக்குவதை விட்டுவிடு! அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்து! அத்தனை பொருள்களையும் படைத்ததும் அவனே! அவன் அதிகாரத்திலேயே அத்தனையும் உண்டு.அல்லாஹ் அல்லாதவர்களிடம் தேடுபவனே! நீ அறிவுடையவன் அல்ல. அவன் கஜானாவில் இல்லாதது ஏதும் உண்டோ? ஃபத்ஹுர்ரப்பானி, முதலாவது மஜ்லிஸ்
        மற்ற எவரையும் விட உனக்கு மிக அருகில் இருக்கும் அல்லாஹ்விடம் கேட்காது மற்றவர்களிடம் கேட்கிறாயே! உனக்கு வெட்கமாக இல்லையா? படைப்பினங்களிடம் கேட்கத்தேவை எதுவும் ஏற்பட்டு விடாதபோது, படைப்பினங்களிடம் கேட்கின்றாயே!  ஃபத்ஹுர்ரப்பானி, 38வது மஜ்லிஸ்
         அனைத்தையும் படைத்தவனிடமே அனைத்தையும் கேள்! நான் அல்லாஹ்வின் பாதையில் தான் உங்களை அழைக்கிறேன். என் பக்கம் உங்களை நான் அழைக்கவில்லை. முனாஃபிக் தான் தன்பக்கம் மக்களை அழைப்பான்.  ஃபத்ஹுர்ரப்பானி, 8வது மஜ்லிஸ்
         ”உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் அவனைத் தவிர எவரும் அகற்ற முடியாது” என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே உன் துன்பத்தை அல்லாஹ் அல்லாதவரிடம் முறையிடாதே!
       யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டுவிட்டானோ அவன் தான் பலமான கயிற்றைப் பிடித்துக்கொண்டான். யார் படைப்பினங்களின் மீது நம்பிக்கை வைக்கின்றானோ, அவன் தண்ணீரை இறுகப் பிடிப்பவனைப் போன்றவன். அவன் கையை விரித்தால் எதனையும் காணமாட்டான்.ஃபத்ஹுர்ரப்பானி, 15வது மஜ்லிஸ்
       அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் இந்த போதனைகளின்படி செயல்பட்டு நடக்க அல்லாஹ் அருள்புரிவானாக!

மன்னிகபடாத பாவம்

இறை நேசர் என்பவர் யார்?



Post image for இறை நேசர் என்பவர் யார்?

இறைவனால் நேசிக்கப்படும் நேசர்களே இறை நேசர்களாவர்! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரன்புக்கு உகந்தவர்கள் யார் என்பது இறுதித் தீர்ப்பு நாளில் அன்றோ தெரியும்! இவர், இவர் தாம் இறைநேசச் செல்வர்கள் என்னும் பட்டியலை இறுதி தீர்ப்பு நாளன்று தானே அல்லாஹ் வெளியிடுவான்.
இந்தப் பாமரர்கள், குறிப்பிட்ட கப்ருவாசிகளை இறைநேசர்கள் என்று எவ்வாறு உய்த்துணர்ந்தார்கள்? தர்காஹ்களுக்குள் அறைப்பட்டுக் கிடப்பவர்தான் இறைநேசர்’ என்றால் உலகில் வாழ்ந்த வாழ்கின்ற வாழப் போகின்ற முஸ்லிம்கள் – மூமின்கள் அனைவரும் ஷைத்தானுடைய நேசர்களா? தங்களை ஷைத்தான்களுடைய நேசர்கள் என்று கருதிக் கொள்பவர்கள் தாமே, குறிப்பிட்ட புதைக் குழிக்குள் அடங்கி இருப்பவரை இறைநேசராகப் போற்றிக் கொண்டாடுவார்! என்னே மதியீனம்?
அல்லாஹ் தன் வான் மறையிலே மிகத் தெளிவாக இறைநேசர்கள் என்பவர் எப்படிப்பட்ட தகுதியை உடையவர்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறான்.
அல்லாஹ் எவரை நேசிக்கின்றான்?
“அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும் நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை – நன்மை செய்வோரை நேசிக்கின்றான்” (21:95)
இவ்விறைவசனத்தில் மூன்றுவகை இறைநேசர்கள் பற்றி கூறப்படுகின்றது.
1) அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்பவர்களை, அல்லாஹ் “இறைநேசர்” எனக் குறிப்பிடுகின்றான்.
2) தங்கள் கைகளாலேயே தங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதவர்களை “இறைநேசர்” என அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
3) நன்மை செய்வோரை அல்லாஹ், “இறைநேசர்” எனச் சுட்டிக் காட்டுகின்றான்.
நாம் ஒன்றைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். சமுதாயத்துக்கு எந்த வகையிலும் பயன்படாத, ஞானிகளைப் போல்(?) பச்சைப் போர்வையுடன் (மெளனம் சாதித்து) அலைந்து திரிந்தவர்களை, வலியுல்லாஹ் (அல்லது) இறைநேசர் என்று பாமர மக்கள் முத்திரைக் குத்தி அவர்கள் இறந்தவுடன் அடக்கம் செய்து, சமாதி எழுப்பி “தர்காஹ்” பித்துக் கொண்ட சில தனவந்தவர்களின் உதவியுடன் சில லட்சங்களில் பெரிய கட்டடம் கட்டி ஆண்டு தோறும் பூஜைகள் – தேர் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. அல்லாஹ்வே ‘வலீ” (பாதுகாவலன்) என்பதைக் கூட உணராத பாரமரர்களிடம் “வலீயுல்லாஹ்” என்பதாக தனி மனிதரைச் சுட்டிக் காட்டி. உண்டியல்களை நிரப்பி, பாவங்களை எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், மொட்டை அடித்து, உடம்பில் அறவே ஆடையில்லாமல் அம்மணமாகத் திரிந்த ஒருவர் பாமரர்களால் இறைநேசராகக் கருதப்படுகின்றார். வாய்ப்பேசாமல் (மெளனியாக) அழுக்கு நிறைந்த ஆடையுடன் திரிந்த கையேந்திய மக்களுக்கு சர்க்கரை என்று மண்ணை அளிக் கொடுத்தவர் இறைநேசச் செல்வராக கருதப்படுகின்றார். “மகான் வாயிலிருந்து வரும் வார்த்தைகளால் தங்கள் துயரங்கள் நீங்காதா?” என்று தேட்டத்துடன் நாடி வந்த மக்கள் முன்னால், சொல்லவே நாகூசுகின்ற கெட்டவார்த்தைகளால் (பெண்களை கண்டபடி) ஏசியவர் இறைநேசராக அங்கீகரிக்கப்படுகின்றார். அமர்ந்து இருக்கும் நேரமெல்லாம் சீட்டு விளையாடி (சூதாடி), பீடி புகைத்துக் கொண்டு, எதுவும் பேசாமல் தெருவில் நடந்து போகும்போதே, தன் பைஜாமாவை இறக்கி, சாக்கடையில் மலம் கழித்து விட்டு, சுத்தம் செய்யாமல் பைஜாமாவைக் கட்டிக் கொண்டவர் இன்றைக்குப் பெரிய நகரம் ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டு இறைநேசராக ஏற்றிப் போற்றப்படுகின்றார். நான் கற்பனையாகக் கூறவில்லை. நடந்த உண்மைச் சம்பவங்களை நினைவில் வைத்தே சுருக்கித் தந்துள்ளேன்.
இவர்களும் இறைநேசர்களே!
“……..யார் தம் வாக்குறுதியை நிறைவேற்றுகின்றார்களோ, (அல்லாஹ்வுக்கு) அஞ்சியும் நடக்கின்றார்களோ (அவர்கள் தாம் குற்றம் பிடிக்கப்படமாட்டார்கள்) உறுதியாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கின்றான்” (3:76)
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுபவர்களையும், எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவர்களையும் அல்லாஹ் தன்னடைய நேசர்களாக அறிவிக்கின்றார்கள்.
“(பயபக்தியுடையொர் எத்தகையோரென்றால்) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள். தவிர, கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை) களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்” (3:134)
செல்வ நிலையிலும், ஏழ்மையிலும் அல்லாஹ்வின் பாதையில் செலவிடுபவர்களை அல்லாஹ், இறைநேசர்கள் எனக் கூறுகின்றான். தம்முடைய கட்டுக்கடங்காத கோபத்தை அடக்கிக் கொள்பவரை “இறை நேசர்” என அறிமுகப்படுத்துகின்றான். தனக்கு எதிராக ஒருவன் செய்யும் குற்றங்களை (குற்றம் செய்தவர்களை) மன்னிப்பவர்கள் இறை நேசர்களாகும் தகுதியைப் பெறுகின்றார்கள்.
“மூமின்களில் இருசாரர் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விரு சாரர்களுக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரர் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்தவர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில் (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால், உறுதியாக அவ்விரு சாரரிடையே சமாதானம் உண்டாக்குங்கள்”. (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்துக் கொள்ளுங்கள். உறுதியாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கின்றான்.” (49:9)
“எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்று, அல்லாஹ்வுடையப் பாதையில் போரிடுகிறார்களோ , நபி அவர்களை உறுதியாக(அல்லாஹ்) நேசிக்கின்றான்” (61:4)
அல்லாஹ்வின் நல்லடியார்களே! இறைநேசர்கள் யார்? யார்? என்பதை இச்சிறு கட்டுரையின் மூலம் ஓரளவுக்குச் சுட்டிக் காட்டியுள்ளேன். எல்லாம் வல்ல அல்லாஹ், அவன் உவக்கும் இறைநேசர்களாக நம்மனைவோரையும் ஆக்கி பேரருள் புரிவானாக! (ஆமின்)

ஷிர்க்கின் தோற்றம்



இணைவைத்தல்
மனிதனின் வாழ்க்கை இவ்வுலகில் தவ்ஹீதை அடிப்படையாகக் கொண்டு துவங்கியதா? அல்லது ஷிர்க்கை அடிப்படையாகக் கொண்டு துவங்கியதா? மனிதன் முதலில் ஓரிறைக் கொள்கையாளனாக இருந்து பின்னர் பல தெய்வ வழிபடு செய்பவனாக மாறினானா? அல்லது பல தெய்வ வழிபாட்டிலிருந்து ஓரிறைக் கொள்கைக்கு மாறினானா என்பதை நாம் முதலில் அறிய வேண்டும். இதற்குத் தெளிவான விளக்கத்தைத் திருகுர்ஆன் கூறுவதைப் பார்ப்போம். “மனிதர்கள் ஒரே சமுதாயமாகவே இருந்தனர்” (அல்குர்ஆன்2:213)

இந்த திருவசனத்தின்படி மனிதன் முதலில் தவ்ஹீது (ஏகத்துவம்) வாதியாகவே இருந்திருக்கிறான் என்பது தெளிவகின்றது. இதே கருத்தைத் தான் ஹதீஸும் வலியுறுத்துகிறது.”நான் அடியார்களைத் தூயவர்களாகவே படைத்தேன் ஆனால் ஷைத்தான் தவ்ஹீதை விட்டும் அவர்களைத் திசைதிருப்பி விட்டான். அவர்களுக்கு (என்னால்) அனுமதிக்கப் பட்டிருந்தவைகளை ஷைத்தான் ஹராமானது என்று காட்டிவிட்டான்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இயாழ் இப்னு அஹ்மது, நூல்: அஹ்மது

ஆரம்பத்தில் மனிதன் ஓரிறைக் கொள்கைவாதியாகவே இருந்தான். பின்னர்தான் பல தெய்வ வணக்க வழிபாடுகளில் மூழ்கிவிட்டான் என்பதை மேற்கூறிய இறை வசனமும் நபி மொழியும் தெளிவு படுத்துகின்றன.

ஷிர்க்கின் (இணை வைத்தல்) மூலகாரணம் என்ன?

ஆதம்(அலை) அவர்களிலிருந்து மனிதன் ஓரிறைக் கொள்கையுடையவனாகவே இருந்து வந்தான். அந்தத் தவ்ஹீதைத் பிரச்சாரம் செய்த நல்லடியர்களை அளவுக்கு அதிகமாகக் கண்ணியப்படுத்தி, கடவுள் நிலைக்கு அவர்களை உயர்த்தியதுதான் “ஷிர்க்” (இணை வைத்தால்) தோன்ற மூல காரணமாக இருந்தது. இந்த உண்மையைத் திருக்குர்ஆன் கூறுகின்றது.

“நீங்கள் உங்கள் தெய்வங்களை விட்டு விடாதீர்கள்! மேலும் ‘வத்து’ ‘சுவாவு’ ‘யஹூது’ ‘யவூக்’ ‘நஸ்றா’ ஆகிய தெய்வங்களை நீங்கள் விட்டு விடாதீர்கள்!” என்று அவர்கள் (நூஹ் நபியின் சமூகத்தினர் கூறினார்கள்) (அல்குர்ஆன் 71:23)

இந்தத் திரு வசனத்தில் கூறப்பட்ட ‘வத்து’ ‘சுவாவு’ ‘யஹூது’ ‘யவூக்’ ‘நஸ்றா’ ஆகியோர் ஆரம்ப காலத்தில் வாழ்ந்த நல்லடியார்கள் என்றும், அவர்கள் மரணமடைந்த பின்னர் அவர்களையே மக்கள் கடவுள் நிலைக்கு உயர்த்தி விட்டனர் என்றும், ஆரம்பத்தில் நினைவுச் சின்னம் எழுப்பினர்; பின்னர் அடுத்த தலை முறையினர் அவர்களையே வணங்க முற்பட்டு விட்டனர் என்றும் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் விளக்கம் தந்தனர். (நூல்: புகாரி- தப்ஸீர் பகுதி)

அன்று நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மக்கள் இணைவைக்க முற்பட்டதற்குக் காரணம் எதுவோ, அதே காரனத்தினால் தான் இன்றும் பெரும் பகுதியினர் ஷிர்க்கில் வீழ்ந்து கிடக்கின்றனர். நபி(ஸல்) தம் உம்மத்தினர் ஷிர்க்கில் விழக்கூடாது என்றூ எவ்வளவோ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். அத்தனையையும் மீறி நல்லடியார்கள் மரணித்த பின் அவர்களின் அடக்கஸ்தலத்தில் பல தகாத செயல்களை செய்யத் துவங்கிவிட்டனர்.

எத்தனையோ பள்ளிவாசல்கள் நிர்வாகம் நடத்த போதிய பொருளாதாரம் இன்றி திணறிக் கொண்டிருக்க, கப்ருகளை நிர்வாகம் செய்யப் பொருளாதாரம் குவிந்து கொண்டிருக்கிறது. அல்லாஹ்வை வணங்க நூறு பேர் வருகின்றனர் என்றால் அவனது அடிமைகளை வணங்க ஆயிரக் கணக்கானோர் குவிந்த வண்ணமாக உள்ளனர்.

இறைவா! “என்னுடைய கப்ரை வணக்கஸ்தலமாக ஆக்கி விடாதே” என்று நபி (ஸல்) அவர்கள் துஆச் செய்துள்ளார்கள் என்றால் அது நமக்கு உணர்த்தும் பாடம் என்ன என்பதைப் எண்ணிப் பாருங்கள்! அல்லாஹ் அவர்களின் துஆவை ஏற்று அவர்களின் அடக்கஸ்தலத்தை வணங்குமிடமாக ஆக்காமல் பாதுகாத்துக் கொண்டான். ஆனால் மற்ற கப்ருகள் அந்த நிலைக்கு மாறி விட்டன!

“நாங்கள் கப்ரை வணங்கவா செய்கிறோம்?” என்று நம்மில் சிலர் கேட்கின்றனர். வணங்குவது என்றால் தொழுவது மட்டும் தான் என்று இவர்கள் எண்ணியுள்ளனர். தங்களின் தேவைகளை நிறை வேற்றும்படி பிரார்த்தனை செய்வதும் வணக்கம் என்பதை என்றுதான் உணவார்களோ? சிலைகளுக்குச் செய்யப்படுவது போல் அலங்காரங்களூம் அபிஷேகங்களும், வேறு பெயர்களில் இங்கேயும் நடக்கத்தான் செய்கின்றன. சிலைகள் முன்னே சிலர் பக்தி சிரத்தையோடு நிற்பது போலவே கப்ருகளின் முன்னிலையிலும் இவர்கள் நிற்கின்றனர். இந்நிலை உணர்ந்து தவ்ஹீத் அடிப்படையில் மக்கள் வாழ அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.

மண்ணறை விசாரணை!




மனிதன் இன்று வாழ்கின்ற வாழ்க்கை எவ்வளவு உண்மையானதோ அதைப் போன்றே மனிதன் மரணித்த பின்னர் சந்திக்கும் மண்ணறை விசாரணையும் நிதர்சனமான உண்மையாகும் என இஸ்லாம் ஆணித்தரமாக அறிவித்துள்ளது. மண்ணறை விசாரணை, மற்றும் விசாரணைக்குப் பிறகு மண்ணறையில் அனுபவிக்கும் இன்பமும், துன்பமும் நடந்தேறும் உண்மைச் சம்பவமாகும் என்பதில் முஸ்லிம்களிடையே மாற்றுக் கருத்து இல்லை!

மறுமையின் முன்னோட்டமாக - மரணித்தவர் மறுமை நாளில் பெறப்படும் சுவர்க்கம் அல்லது நரகத்தைத் தீர்மானிக்கும் இடமாக மண்ணறை அமைந்துள்ளது. மனிதனின் உயிர் கைப்பற்றப்பட்டு, மரணித்தவுடன் நடக்கும் நிகழ்வுகளை குர்ஆன், சுன்னா விவரித்திருப்பதிலிருந்து மரணித்த ஆன்மாவின் வாழ்க்கை என்பது மனிதனின் புலன்களுக்கு எட்டாத் தனியொரு உலகம் என்பதை மிகத் தெள்ளத் தெளிவாக விளங்கலாம். ஆன்மாக்களின் மண்ணறை வாழ்க்கை மறைவானது என்றாலும் அவற்றை நம்பவேண்டும் என்பதே இஸ்லாம் மார்க்கத்தின் நிலைப்பாடு!

மரணித்தவரின் மண்ணறை வாழ்க்கையை, மரணிக்கவிருக்கும் மனிதன் சிறிதளவேனும் அறிந்து கொண்டால் அதுவே பெரும் படிப்பினையாகும். எனும் நோக்கில் மண்ணறை விசாரணைக் குறித்து அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அறிவித்த சில செய்திகள் இங்குத் தரப்படுகின்றன.

இறைவசனங்கள்:

நமது வசனங்களைப் பொய்யெனக் கொண்டு, அவற்றை விட்டும் பெருமையடிப்பவர்களுக்கு வானத்தின் வாயில்கள் திறக்கப்பட மாட்டா. ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சுவர்க்கத்தில் நுழையவும் மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளுக்கு நாம் கூலி வழங்குவோம் (அல்குர்ஆன் 7:40).

இறைநம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான வார்த்தையைக் கொண்டு நிலைபெறச் செய்வான். மேலும் அநியாயக்காரர்களை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுவான். அல்லாஹ், தான் நாடுவதைச் செய்வான் (அல்குர்ஆன் 14:27).

அல்லாஹ்வுக்கும் எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக வாழுங்கள்; இன்னும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர், வானத்திலிருந்து தரைவியில் விழுந்து, பறவைகள் அவரை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவார் (அல்குர்ஆன் 22:31).

திண்ணமாக, (கடுங்காவல் கைதிகளின் ஏடான) ஸிஜ்ஜீனில் தீயோர்களின் விதிப்பதிவு உள்ளது (அல்குர்ஆன் 83:7).

திண்ணமாக, (மேன்மக்களின் ஏடான) இல்லிய்யீனில் நல்லோர்தம் விதிப்பதிவு உள்ளது (அல்குர்குர் 83:18).

நபிமொழிகள்:

அன்ஸாரிகளில் ஒருவரின் (ஜனாஸா) இறுதிக் கடனை நிறைவேற்றுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் புறப்பட்டு, அடக்கத்தலத்திற்குப் போய்ச் சேர்ந்தோம். அங்குக் குழிதோண்டி முடிக்கப்படவில்லை. எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி, எங்களின் தலைகள் மீது பறவை இருந்ததைப் போன்று (அசையாமல்) அமர்ந்திருந்தோம். நபி (ஸல்) அவர்களின் கையில் குச்சியொன்று இருந்தது. அதைக் கொண்டு அவர்கள் தரையில் குத்திக்கொண்டிருந்தார்கள்.

பின்னர், தமது தலையை உயர்த்தி, "அடக்கத்தலத்தின் (கப்ரின்) வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்" என்று இரண்டு அல்லது மூன்று தடவை கூறிவிட்டுத் தொடர்ந்து கூறலானார்கள்:

"இறைநம்பிக்கை கொண்ட அடியார் இவ்வுலகத்திலிருந்து விடைபெற்று, மறுமையை நோக்கிச் செல்லும் நிலையில் இருந்தால், வானவர்கள் சிலர் வானத்திலிருந்து இறங்கி அவர்களிடம் வருவர். அவர்களின் முகங்கள் வெண்மையாக இருக்கும். அவை சூரியனைப் போன்று ஒளிரும். அவர்களுடன் சொர்க்கத்தின் கஃபன் (பிரேத) ஆடைகளில் ஓர் ஆடையும் சொர்க்கத்தின் வாசனைத் திரவியங்களில் ஒன்றும் இருக்கும். இறுதியில், அவரது பார்வை எட்டும் தூரத்தில் அவர்கள் வந்து அமர்வார்கள். பின்னர் உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவரது தலைக்கு அருகில் அமர்வார். அவர், 'தூய்மையான உயிரே! அல்லாஹ்வின் மன்னிப்பையும் அன்பையும் நோக்கி நீ புறப்படுவாயாக' என்பார்.

அப்போது தண்ணீர்ப் பையின் வாயிலிருந்து நீர் வழிவதைப் போன்று (அவரது உடலிலிருந்து) உயிர் வெளியேறும். உடனே அதை அந்த வானவர் எடுத்துக்கொள்வார். அவர் எடுத்ததும் கண்ணிமைக்கும் நேரம்கூட அந்த உயிரை அவரது கையில் மற்ற வானவர்கள் விட்டு வைக்கமாட்டார்கள். இறுதியில் அதை அவர்கள் வாங்கிக்கொண்டு (தாம் கொண்டு வந்த) பிரேதத் துணியில் வைத்து அந்த வாசனைத் திரவியத்தைப் பூசுவார்கள். பூமியின் மேற்பரப்பில் கிடைக்கும் கஸ்தூரியின் உயர்தரமான நறுமணத்தைப் போன்றதொரு நறுமணம் அதிலிருந்து வெளிவரும்.

பின்னர் அந்த உயிருடன் வானவர்கள் மேலே ஏறுவார்கள். அவர்கள் அந்த உயிரை எடுத்துக்கொண்டு வானவர்களின் ஒரு கூட்டாத்தாரைக் கடந்து செல்லும்போதெல்லாம் அந்தக் கூட்டத்தார், 'இந்தத் தூய உயிர் யாருடையது?' என்று கேட்பர். அதற்கு அவர்கள், 'இன்னாரின் மகன் இன்னார்' என்று அவருக்கு மக்கள் உலகத்தில் சூட்டியிருந்த பெயர்களில் அழகான பெயரைக் குறிப்பிடுவார்கள். இறுதியில் அந்த உயிருடன் பூமியின் (அருகிலிருக்கும் முதல்) வானத்தை வானவர்கள் அடைவார்கள்.

அவருக்காக அந்த வானத்தைத் திறக்கக் கோருவார்கள். அவருக்காக அது திறக்கப்படும். ஒவ்வொரு வானத்திலிருக்கும் இறை நெருக்கம்பெற்ற வானவர்கள் அந்த வானத்திலிருந்து அடுத்த வானம்வரை அவரைப் பின் தொடர்ந்து செல்வார்கள். இறுதியில் அவர் ஏழாவது வானத்திற்குக் கொண்டு செல்லப்படுவார். அப்போது வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ், 'என் அடியானின் (வினைப்) பதிவேட்டை (நல்லோர்களின் வினைகள் பதிவு செய்யப்பட்ட) இல்லிய்யூன் எனும் பேரேட்டில் பதிவு செய்யுங்கள். அவரை மறுபடியும் மண்ணுக்கே அனுப்புங்கள், ஏனெனில் அதிலிருந்தே அவர்களை(மனிதர்களை)ப் படைத்தேன்; அதற்கே அவர்களை நான் திருப்பி அனுப்புவேன். (பின்னர்) மற்றொரு முறை அதிலிருந்தே அவர்களை நான் வெளியாக்குவேன்' என்று கூறுவான்.

பின்னர் அவரது உயிர் (மண்ணறையிலுள்ள) அவரது உடலில் திருப்பிச் செலுத்தப்படும். அவரிடம் இரண்டு வானவர்கள் வந்து அவரை (எழுப்பி) அமரவைப்பர். அவ்விருவரும் அவரிடம், 'உம்முடைய இறைவன் யார்?' என்று கேட்பர். அதற்கு, 'என் இறைவன் அல்லாஹ்' என்று அவர் பதிலளிப்பார். அடுத்து, 'உமது மார்க்கம் எது?' என்று அவ்விருவரும் அவரிடம் கேட்பர். 'எனது மார்க்கம் இஸ்லாம்' என்று அவர் கூறுவார்.

பிறகு 'உங்களிடையே அனுப்பப்பட்ட இன்னார் யார்?' என்று (என்னைப் பற்றி) அவ்விருவரும் அவரிடம் கேட்பர். 'அவர் அல்லாஹ்வின் தூதர்' என்று அவர் பதிலளிப்பார். அவ்விருவரும் 'அது எப்படி உமக்குத் தெரியும்?' என்று அவரிடம் கேட்பார்கள். அதற்கு அவர், 'நான் அல்லாஹ்வின் வேதம் (குர்ஆனைப்) படித்தேன்; அதன் மீது நம்பிக்கை கொண்டேன்; உண்மையென ஏற்றேன்' என்று கூறுவார்.

உடனே வானிலிருந்து, 'என் அடியார் உண்மை உரைத்தார். எனவே அவருக்குச் சொர்க்கத்தி(ன் விரிப்புகளி)லிருந்து (ஒரு விரிப்பை) விரித்துக் கொடுங்கள். சொர்க்க ஆடைகளில் ஒன்றை அணிவியுங்கள், அவருக்காகச் சொர்க்க வாசல் ஒன்றைத் திறந்துவிடுங்கள்' என்று அறிவிப்பு வரும். (அவ்வாறே ஏற்பாடுகள் செய்யப்படும்) அந்த வாசல் வழியாகச் சொர்க்கத்தின் நறுமணமும் வாசனையும் அவரிடம் வரும். பார்வை எட்டும் தூரம்வரை அவருக்கு அவரது அடக்கத்தலம் விரிவுபடுத்தப்படும். பின்னர் பொலிவான முகமும் அழகான ஆடையும் நல்ல நறுமணமும் கொண்ட ஒருவர் அவரிடம் வந்து, 'உமக்கு மகிழ்ச்சி தரும் நற்செய்தியொன்றை(ச் சொல்கிறேன்) கேளும்; இதுதான் உமக்கு வாக்களிக்கப்பட்ட நாள் ஆகும்' என்பார்.

அப்போது அவர், அந்த அழகானவரிடம் 'நீர் யார்? உமது முகம் நன்மையைக் கொண்டுவரும் முகமாக உள்ளதே' என்று கேட்பார். அதற்கு அந்த அழகர், 'நான்தான் நீர் செய்த நற்செயல்கள்' என்பார். உடனே அவர் 'என் இறைவா! யுக முடிவு (நாளை இப்போதே) ஏற்படுத்துவாயாக; நான் என் குடும்பத்தாரிடமும் செல்வத்திடமும் மறுபடியும் போய்ச்சேர வேண்டும்' என்று கூறுவார்.

(ஏக இறைவனை) மறுதலித்த அடியார் ஒருவர் இவ்வுலகத்திலிருந்து விடைபெற்று மறுமையை நோக்கிச் செல்லும் நிலையில் இருந்தால், வானவர்களில் சிலர் வானிலிருந்து இறங்கி அவரிடம் வருவர். அவர்களின் முகங்கள் கருப்பாக இருக்கும். அவர்களுடன் முடியாலான (முரட்டு கஃபன்) ஆடை ஒன்று இருக்கும். அவர்கள் அவரது பார்வை எட்டும் தூரத்தில் வந்து அமர்ந்துகொள்வார்கள். பின்னர் உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவரது தலைக்கு அருகில் அமர்வார். 'மாசடைந்த ஆன்மாவே! அல்லாஹ்வின் வெறுப்பையும் சினத்தையும் நோக்கிப் புறப்படு' என்பார். அப்போது அவரது உடல் தளர்த்தப்படும். பின்னர் ஈரக் கம்பளியில் சிக்கிக்கொண்ட முள்ளை இழுப்பதைப் போன்று அவரது உடலிலிருந்து உயிரைப் பிடித்து இழுத்துப் பறிப்பார்.

உயிரைப் பறிக்கும் வானவர் அந்த உயிரைக் கைப்பற்றியதும் கண்ணிமைக்கும் நேரம்கூட அதை அவரது கையில் அந்த வானவர்கள் விட்டு வைக்கமாட்டார்கள். உடனே அதை அவர்கள் பெற்று (தாம் கொண்டு வந்திருக்கும்) முடியாலான அந்த (முரட்டுக் கஃபன்) ஆடையில் வைப்பார்கள். அப்போது ஒரு பிணத்தின் மேற்பரப்பிலிருந்து வீசும் மிக மோசமான துர்வாடையைப் போன்று அதிலிருந்து துர்நாற்றம் வெளிவரும். பின்னர் அந்த உயிருடன் வானவர்கள் மேலே ஏறுவார்கள். அவர்கள் அந்த உயிரை எடுத்துக்கொண்டு வானவர்களின் ஒரு கூட்டத்தைக் கடந்து செல்லும்போதெல்லாம் அந்தக் கூட்டத்தார், 'இந்த மாசடைந்த உயிர் யாருடையது?' என்று கேட்பர். அதற்கு அவர்கள், 'இன்னார் மகன் இன்னாருடையது' என்று அவருக்கு மக்கள் உலகத்தில் சூட்டியிருந்த பெயர்களில் அருவருப்பான பெயரைக் குறிப்பிடுவார்கள். இறுதியில் அந்த உயிருடன் பூமியின் (அருகிலிருக்கும் முதல்) வானத்திற்குப் போய்ச்சேர்வார்கள். அவருக்காக அந்த வானத்தைத் திறக்கக் கோருவார்கள். ஆனால் அவருக்காக வானம் திறக்கப்படாது"

இவ்வாறு கூறிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''அவர்களுக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்படா. ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும்வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்'' எனும் (7:40) வசனத்தை ஓதினார்கள். தொடர்ந்து,

"பின்னர் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், 'அவனது (வினைப்) பதிவேட்டை ஆகக் கீழ்நிலையில் உள்ள ஸிஜ்ஜீன் எனும் பேரேட்டில் பதிவு செய்யுங்கள்' என்று கூறுவான். உடனே அவரது உயிர் வேகமாக வீசியெறிப்படும்" இவ்வாறு கூறிய நபி (ஸல்) அவர்கள், '... அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர், வானத்திலிருந்து தரைவியில் விழுந்து, பறவைகள் அவரை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவார்" (அல்குர்ஆன் 22:31) எனும் வசனத்தை ஓதினார்கள். தொடர்ந்து,

"பின்னர் அவரது உயிர் (பூமியிலுள்ள) அவரது உடலில் திருப்பிச் செலுத்தப்படும். அவரிடம் இரு வானவர்கள் வந்து அவரை எழுப்பி அமரவைப்பர். பின்னர் அவரிடம், 'உன்னுடைய இறைவன் யார்?' என்று கேட்பர். அதற்கு அவர் 'அந்தோ! எனக்கு எதுவும் தெரியாதே!' என்று கூறுவார். அவ்விருவரும், 'உனது மார்க்கம் எது?' என்று கேட்பர். அவர், 'அந்தோ! எனக்கு எதுவும் தெரியாதே!' என்பார். அடுத்து 'உங்களிடையே அனுப்பப்பட்டிருந்த இன்னார் யார்?' என்று (என்னைப் பற்றி) அவ்விருவரும் கேட்பர். அப்போதும் அவர், 'அந்தோ! எனக்கொன்றுமே தெரியாதே!' என்று பதிலளிப்பார்.

அப்போது வானத்திலிருந்து, 'என் அடியான் பொய்யுரைத்துவிட்டான். எனவே, அவனுக்கு நரகத்தின் விரிப்புகளிலிருந்து (ஒரு விரிப்பை) விரித்துக்கொடுங்கள்; அவனுக்காக நரக வாசல் ஒன்றைத் திறந்துவிடுங்கள்' என்று அறிவிப்பு வரும். நரகத்தின் வெப்பமும் கடும் அனலும் அவரிடம் வரும். அவரை அவரது மண்ணறை(யின் இரு பக்கமும்) நெருக்கும். அதனால் அவரது விலா எலும்புகள் இடம் மாறும். அவரிடம் அவலட்சணமான முகமும் அருவருப்பான உடையும் துர்வாடையும் உள்ள ஒருவர் வந்து, 'உனக்கு வருத்தமளிக்கும் செய்தி செய்தியொன்றைச் சொல்கிறேன் கேள்; இதுதான் உமக்கு வாக்களிக்கப்பட்ட நாள் ஆகும்' என்பார். அப்போது அவர், அந்த அவலட்சணமானவரிடம் 'நீர் யார்? உமது முகம் தீமையைக் கொண்டுவரும் முகமாக உள்ளதே!' என்று கேட்பார் அதற்கவர், 'நான்தான் நீ செய்த தீய செயல்கள்' என்பார். உடனே அந்த இறைமறுப்பாளர், 'என் இறைவா! யுக முடிவு நாளை (இப்போது) ஏற்படுத்திவிடாதே' என்று கதறுவார்" என்று நபி (ஸல்) விளக்கினார்கள் - அறிவிப்பவர் பராவு பின் ஆஸிப் (ரலி) (நூல்கள் - அஹ்மத் 18063, அபூதாவூத் 4753).

ஷஹாதத் எனும் கலிமா என்பது வெறும் வாயால் மொழிவது மட்டுமல்ல. தேடுதல் அடிப்படையில் ஏக இறைவனை நெஞ்சாறயேற்று ஓரிறைக் கொள்கையை உறுதியாகப் பற்றிப்பிடித்து நடைமுறைப்படுத்துவதாகும்! இம்மை வாழ்வில் மனிதன் எதில் உறுதியாக இருந்து, கொள்கையளவில் தாம் உறுதி செய்தவற்றை சிந்தனையில் பதிவுசெய்து, இவ்வுலக வாழ்வில் கடைப்பிடித்து வாழ்கிறாரோ அதுவே மரணத்திற்குப் பின்னர் நிகழும் ஆன்ம வாழ்வில் வெளிப்படும்.

உலக வாழ்க்கையில் அகமொன்று வைத்து, புறமொன்றுப் பேசி சமர்த்தியமாகத் தப்பித்து விடுவதுபோல், மனிதன் மரணித்த பின்னர் மண்ணறை விசாரணையில் அவனது எந்தக் கெட்டிக்காரத்தனமும் எடுபடாது!

இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் கட்டுப்பட்டு வழிப்பட்டோரை இம்மை, மறுமை ஈருலகத்திலும் உறுதியான வார்த்தைகளைக் கொண்டு அல்லாஹ் நிலைபெறச் செய்கிறான். ஒருவர் இம்மையில் எந்தக் கொள்கையில் உறுதியாக இருந்தாரோ அதுவே மண்ணறை விசாரணையிலும் வெளிப்படும்.

திருக்குர்ஆன் 14:27வது வசனத்தின் கருத்து என்பது கப்ரு விசாரணையைப் பற்றியே அல்லாஹ் குறிப்பிடுவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விளக்கியுள்ளார்கள்:

"ஒரு முஸ்லிம் (இறந்தபின்) மண்ணறையில் விசாரிக்கப்படும்போது, அவர் 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை; முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள்' என்று உறுதிமொழி கூறுவார். இதுதான் '(இறை) நம்பிக்கை கொண்டோரை, அல்லாஹ் ஒரு வலுவான வாக்கின் அடிப்படையில் இம்மையிலும், மறுமையிலும் உறுதிப்படுத்துகிறான்' எனும் (14:27 வது) இறை வசனத்தின் கருத்தாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் - அறிவிப்பவர் பராவு பின் ஆஸிப் (ரலி) (நூல்கள் - புகாரி 1369, 4699, முஸ்லிம் 5508, 5509, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்).

இந்த வசனம் மண்ணறை வேதனை சம்பந்தமாகவே அருளப்பட்டது என ஷுஃபாவின் அறிவிப்பில் காணப்படுகிறது.

"உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்திலிருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்). மேலும், அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகிற வரைக்கும் இதுவே (கப்ரே) உன்னுடைய தங்குமிடம் என்றும் கூறப்படும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் - அறிவிப்பவர் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) (நூல்கள் - புகாரி 1379, 3240, 6515. முஸ்லிம் 5500, 5501, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத், முவத்தா மாலிக்).

"ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை அந்த மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, 'முஹம்மத் என்பவரைப் பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' எனக் கேட்பர். அதற்கவன், 'அவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான். பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் அதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், 'எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' என்பான். அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி(விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்ளையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கதறுவான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் - அறிவிப்பவர் அனஸ் (ரலி) (நூல்கள் - புகாரி 1338, 1374. முஸ்லிம் 5505. நஸயீ, அபூதாவூத், அஹ்மத்)

நாடு, மொழி, இனம், நிறம், சாதி, மதம், கொள்கை, சிந்தனை எனப் பலவற்றிலும் வேறுபட்டு வாழும் மனித இனம் "மரணம் என்பது எந்த உயிருக்கும் தவிர்க்க முடியாதது; வந்தே தீருவது" என்பதில் மட்டும் ஒத்த கருத்துக் கொண்டிருக்கிறது. கூடுதலாக, "மரணத்தை அடுத்து மண்ணறை வாழ்க்கை; இறைவனின் இறுதித் தீர்ப்புக்குப் பின்னர் நிரந்தர வாழ்க்கை" என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. தவிர்க்கவே முடியாத, எந்த நேரமும் நாம் எதிர்கொள்ள வேண்டிய மண்ணறை வாழ்க்கையைப் பற்றி நம்பிக்கை கொண்டுள்ள நாம், அதில் எந்த அளவு உறுதியாய் இருக்கிறோம்? சத்தியமான அந்த வாழ்க்கைக்காக நாம் எந்த வகை தயாரிப்பில் இருக்கிறோம்? எனும் சுயபரிசோதனை செய்து கொள்வதற்கு இந்த ஆக்கம் உந்துகோலாக அமையட்டுமாக!

சரியான பதில்களைக் கூறி மண்ணறை வாழ்வில் வெற்றி பெறுபவர்களாக நாம் ஆவதற்கு வல்ல அல்லாஹ்வின் பேரருளை வேண்டுவோம்; மண்ணறை வாழ்க்கையைச் செம்மைப் படுத்திக் கொள்ள வேண்டிய முயற்சிகளில் முனைப்புக் காட்டுவோம்; வெற்றியடைவோம், இன்ஷா அல்லாஹ்!